தில்லுமுல்லு ஸ்டைலில் மோசடி... இரட்டை வேட நாயகனுக்கு போலீஸ் வலைவீச்சு

author img

By

Published : Aug 14, 2021, 9:40 PM IST

Marriage man c

இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறிக்க இரட்டை பிறவி நாடகத்தை கையிலெடுத்த நபர் ஒருவர், போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செலினா ராயன். இவரது, மகன் வில்லாண்டர் பெனட்ராயன், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வில்லாண்டர் பெனட்ராயன் தன்னுடன் வேலைபார்க்கும் ஆவடியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், அவரிடம் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளதை என்பதை மறைத்தே காதலித்துவந்துள்ளார் வில்லாண்டர்.

நாளடைவில், இவர்களது காதல் திருமணம் வரை சென்றுள்ளது. அப்பெண், வில்லாண்டரை தன்னை திருமணம் செய்துகொள்வது குறித்துப் பெற்றோரிடம் பேசுங்கள் எனக் கூறியுள்ளார். பெண்ணின் பெற்றோரும் கிரின் சிக்னல் காட்டியதால், இருவீட்டார் முன்னிலையில் கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

முதல் திருமணம் மறைப்பு

பெண்ணின் குடும்பம் வசதிபடைத்தவர்கள் என்று தெரிந்ததால், வில்லாண்டரின் தாயான செலினாராயனும், மகனின் முதல் திருமணம் குறித்த தகவலை அவர்களிடமிருந்து மறைத்துள்ளார்.

police
தில்லுமுல்லு ஸ்டைலில் மோசடி

நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்கள் கழித்து இளம் பெண்ணை போனில் அழைத்த வில்லாண்டரின் நண்பர் ஒருவர், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த அப்பெண், வில்லாண்டரிடம் அதுகுறித்து விசாரித்துள்ளார்.

தில்லுமுல்லு ஸ்டைலில் மோசடி

ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர், தான் இரட்டை பிறவி, தனது சகோதரர் திருமணமாகி துபாயில் செட்டிலாகி விட்டார். இருவரும் அச்சு வார்த்தார்போல் ஒரே மாதிரி இருப்பதால் இந்த குழப்பம் அனைவருக்கும் ஏற்படுவதாக அந்தர்பல்டி அடித்து சமாளித்துள்ளார். வில்லாண்டர் பேச்சை நம்பிய பெண்ணின் வீட்டார், திருமண வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், திருமண வேலைக்கு எனக்கூறி வில்லாண்டர் பெனட்ராயன் பெண் வீட்டாரிடம் 3.5 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர், மீண்டும் இளம் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படவே, வில்லாண்டரிடம் இதுகுறித்து மீண்டும் கேட்டுள்ளார். அச்சமயத்தில் தோன்றிய கதையை, உண்மையாக்கும் முயற்சியில் வில்லாண்டா் களமிறங்கினார்.

போலி ஆவணங்கள் தயாரிப்பு

தனது முந்தைய திருமண போட்டோ ஆல்பத்தில் தனது புகைப்படத்தையே மார்பிங் செய்து இணைத்து அவரிடம் காண்பித்து, அதுதான் தனது அண்ணன் எனக் கூறியுள்ளார்.

police
போலி ஆவணங்கள்

மேலும், கூடுதலாக தனது போலீஸ் வெரிவிக்கேஷன் சான்றிதழ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுப்பத்திரம் என அனைத்து ஆவணங்களையும் போலியாக தயாரித்து அதை இளம் பெண்ணிடம் காட்டி, போலியான அண்ணனுக்கு உயிர் கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி தனது முதல் மனைவியிடமும், தான் இரட்டை பிறவி எனக்கூறி போலியான வீடியோவை ரெடி செய்து காண்பித்துள்ளார்.

இதனையடுத்து, திருமணம் நெருங்கும் சமயத்தில் வில்லாண்டர் பெனட்ராயனின் உறவினர் ஒருவர், அந்த இளம் பெண்ணிடம் வில்லாண்டரின் முதல் திருமணம் குறித்து ஆதாரங்களுடன் எடுத்துக்கூற விஷயம் விஸ்வரூபமெடுத்தது.

கட்டுபஞ்சாயத்து செய்த போலீஸ்

இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வில்லாண்டர் மற்றும் குடும்பத்தாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் மனைவி குற்றஞ்சாட்டு

விசாரணையில் இரட்டைப் பிறவி நாடகத்தை ஒப்புக்கொண்டதால், காவல் துறையினர் கட்ட பஞ்சாயத்து மோடுக்குச் சென்றுள்ளனர். வில்லாண்டரிடம் திருமண செலவு என வாங்கிய பணத்தை முழுமையாக திருப்பி அளித்து விடுவதாகக்கூறி, முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாய் பணத்தைப் பெண் வீட்டாரிடம் வாங்கி கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை 30 நாள்களுக்குள் திருப்பி அளித்துவிடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால், மீதமுள்ள பணத்தை திருப்பிக் கொடுக்காமல் வில்லாண்டர் பெனட்ராயனின் குடும்பத்தார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து, அரும்பாக்கம் காவல்நிலையத்தில் கேட்ட பொழுது காவல் துறையும் அலட்சியம் காட்டவே, அப்பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற காவல் துறையினர் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி கிடப்பில் போட்டுள்ளனர்.

police
இரட்டை வேட நாயகனுக்கு போலீஸ் வலைவீச்சு

கொலை மிரட்டல்

இதுதொடர்பாக வில்லாண்டரிடம் அப்பெண் நேரடியாக கேட்கையில், ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என வில்லாண்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன இளம்பெண், இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஜீன் 23ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.

பின்னர், இந்த வழக்கு மீண்டும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இவ்விவகாரம் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து புகார் வந்ததால், ஆவடி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

பணத்துடன் ஓடிய நாயகனுக்கு வலைவீச்சு

வில்லாண்டர் இரட்டைப் பிறவி நாடகம் நடத்தி, போலி ஆவணங்கள் மூலம் இளம் பெண் வீட்டாரை ஏமாற்றி பணம் பெற்றதும், அதற்கு வில்லாண்டரின் தாய் செலினா ராயன் உடந்தையாக இருந்ததும் உறுதியானது.

தற்போது, தலைமறைவாகவுள்ள இருவர் மீதும் ஆள் மாறாட்டம், மோசடி, போலி ஆவணங்களைத் தயார் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். குறிப்பாக செல்போன் எண்ணை வைத்து ட்ரேக் செய்து வருகின்றனர்.

இரட்டைப் பிறவி நாடகம் நடத்தி திருமணமான நபர், இளம் பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பரை கத்தியால் குத்திக்கொன்றவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.